Sunday, January 13, 2013


வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

Saturday, January 12, 2013


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

Friday, January 11, 2013


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

 கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய.




Thursday, January 10, 2013

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே

சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

Wednesday, January 9, 2013

ஒருத்தி மகனாய்ப் பிறந்து  ஓர் இரவில் 

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை-

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Tuesday, January 8, 2013


அன்று இவ் வுலகம் அளந்தாய் அடி போற்றி

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி

கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்

இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

Monday, January 7, 2013

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்-

கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய-

சீரிய சிங்காசனத்து இருந்து  யாம் வந்த-

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

Sunday, January 6, 2013

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

Saturday, January 5, 2013

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

Friday, January 4, 2013


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!

செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!

உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

Thursday, January 3, 2013

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்!

Wednesday, January 2, 2013

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!

கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!

வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

Tuesday, January 1, 2013

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்! 

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த

உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!