Wednesday, September 30, 2015

திருத்தலம் அறிவோம்


தலம் : அம்மன்குடி

செல்லும் வழி : கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன் கோயில் வழியாக வடகரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தூரம் சென்றால் அம்மன்குடியை அடையலாம்
தல சிறப்பு : அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.

அதிசய விநாயகர்: இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.

அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் "தண்டை' என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள்.
திருத்தலம் அறிவோம்


ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம் - கட்டீல்
மங்களூர், கர்நாடகா


ஜாபாலி முனிவரின் தவத்துக்கு இரங்கிய பராசக்தி காமதேனுவின் மகளான நந்தினி எனும் பசுவை நேத்ராவதி நதியாக மாறி உலக மக்களின் பஞ்சம் தீர்க்க அனுப்பி வைத்தார்.

பூவுலகில் கொடுமைகள் புரிந்து கொண்டிருந்த அருணாசுரனை வதம் செய்ய எண்ணிய அம்மன் மோகினியாக உருமாறி வர அவளைப் பிடிக்க வத அசுரனிடமிருந்து ஓடி நேத்ராவதி நதியின் நடுவிலிருந்த பாறையில் ஒளிந்தாள்
பாறையைப் பிளந்த அசுரனை அதிலிருந்து வண்டுகள் வெளியாகி சம்ஹாரம் செய்ய உக்ரமான வண்டு உருவிலிருந்த அம்மனுக்கு முனிவர்கள் இளநீர் அபிஷேகம் செய்து சாந்தமாக்கினர். அவர்கள் விருப்பப்படி நதியின் நடுவே துர்கா பரமேஸ்வரி எனும் பெயருடன் கோவில் கொண்டாள் அம்பாள்.
மூல விக்ரகம் லிங்க வடிவில் இருப்பதாகவும் அம்பாள் போல அலங்காரம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது நதியின் மடியில் தோன்றியதால் மடி எனப் பொருள்படும் கடில் எனும் வார்த்தை இன்று கட்டீல் என மருவி விளங்குகிறது.
கர்பக்கிரகத்தின் அடியிலும், கோவிலுக்குக் கீழும் நதியின் ப்ரவாகம் செல்வதை உணரலாம். கர்பக்கிரகம் ஈரமாக காணப்படுகிறது. அம்பாளின் பிரசாதமான குங்குமமும் ஈரம் படிந்தே இருக்கும். இங்கே தீர்த்தம், வளையல், சந்தனம், பாக்குப்பூ இவற்றுடன் கர்நாடகாவின் பிரபலமான சங்கராபுரம் குண்டு மல்லிகைப் பூவும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்தத் தலம் மங்களூரில் இருந்து 29 கி.மீ தூரத்தில் இருக்கிறது.
மங்களூரிலும், கடீலிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. எல்லா கர்நாடக கோவிலகளைப் போல இங்கும் பகலிலும், முன்னிரவிலும் அன்னதானம் நடைபெறுகிறது.
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியே சரணம்.
முகவரி :
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம்
கட்டீல், மங்களூர் தாலுகா
தக்ஷிண கர்நாடகா மாவட்டம்
பின்கோடு - 574148
தொலைபேசி : 0824- 2200361/2200591/2200561