Friday, August 14, 2015


திவ்ய தேசங்கள் - விளக்கம்



பனிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் எந்த திவ்யதேசத்தையும் மங்களாசாசனம் செய்யவில்லை. "வேதம் தமிழ் செய்த மாறன்" எனும் நம்மாழ்வாரிடம் கொண்ட பக்தியல்லாது "வேறொன்றும் நானறியேன்" என்றார்.  பகவத் சேவையிலும் உயர்ந்த பாகவத சேவை புரிந்து அவரும் ஆழ்வார்களுள் ஒருவரானார்.

அவரை விடுத்து மீதமுள்ள பதினொரு ஆழ்வார்களும் திவ்யதேசங்களை  கீழே கண்டுள்ளபடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.

1. பொய்கையாழ்வார்                     -     6

2. பூதத்தாழ்வார்                                -   13

3. பேயாழ்வார்                                    -   15

4. திருமழிசையாழ்வார்                 -   17

5. நம்மாழ்வார்                                   -   37

6. குலசேகராழ்வார்                         -     9

7. பெரியாழ்வார்                                -   18

8. ஸ்ரீஆண்டாள்                                  -    11

9. தொண்டரடிப்பொடியாழ்வார் -      1

10. திருப்பாணாழ்வார்                    -       3

11. திருமங்கையாழ்வார்               -     86


இவற்றில் சில தலங்கள் பல ஆழ்வார்களின் பாடல் பெற்ற பெருமையுடன் விளங்குகின்றன.  வேறு சில தலங்களோ இனிப்புப் பலகாரத்தில் சுவை கூட்டும் முந்திரிப் பருப்பு போல ஒரே பாடலுக்குள் அமர்ந்து பொலிகின்றன.


ஆழ்வார்கள்                                                மங்களாசாசனம் பெற்ற தலங்கள்

          11                                                                    1  ( ஸ்ரீரங்கம் )

          10                                                                    2  ( திருமலை, திருப்பாற்கடல்)

            9                                                                                    ----------

            8                                                                     1  ( திருப்பரமபதம்)

            7                                                                     1   ( திருக்குடந்தை )

            6                                                                     1   ( திருமாலிருஞ்சோலை )

            5                                                                       6

            4                                                                       3

            3                                                                       5

            2                                                                      21

            1                                                                      67


மொத்தம் 108.  இவற்றில் கிடந்து, இருந்து, நின்று என மூவகைத் திருக்கோலங்களில் திருமால் காட்சி தருகிறார்.



கிடந்த திருக்கோலம் சயனத்திருக்கோலம் என்று அழைக்கப்படும்.  இவை
பத்து வகைப்படும்

1. ஜல சயனம்

2. தல சயனம்

3. புஜங்க சயனம் அல்லது சேஷ சயனம்

4. வீர சயனம்

5. போக சயனம்

6. உத்தியோக சயனம்

7. தர்ப்ப சயனம்

8. பத்ர சயனம் ( பத்ரம் என்றால் இலை என்று பொருள் )

9. மாணிக்க சயனம்

10. உத்தான சயனம்

தல விளக்கத்தின்போது அந்தந்தத் தலங்களின் சயன வகை பற்றிக் காண்போம்.

திருக்கோட்டியூர், கூடலழகர், திரு நீர்மலை, திருவல்லிக்கேணி ஆகிய தலங்களில் ஒரே ஆலயத்தில் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களைக் கண்டு அருள் பெறலாம்.

( தொடருவோம் )

Thursday, August 13, 2015

துக்க நிவாரணி அஷ்டகம்


மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்;
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்;
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே;
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே;
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லையென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறி சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

நூற்றெட்டு வைணவ திவ்ய தேசங்கள்

எவரொருவர் எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து தம்மை முழுமையாக சமர்ப்பிக்கின்றாரோ அவருக்கே வைணவத்துவம் சித்திக்கின்றது.

சர்வம் விஷ்ணு மயம் ஜகத் எனும் வாக்கிற்கு இணங்க உலகமே பகவானின் சரீரமாகி அவனே அதன் ஆன்மாவாகி விளங்குகிறான்.

உலகைக் காத்திட திருவுள்ளம் கொண்ட எம்பெருமான் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் என ஐந்து வடிவங்களில் தரிசனம் தருகின்றார்.



1.திருபரமபதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி எனும் மூவருடன் எழுந்தருளி நித்ய சூரிகள் புடைசூழ ஆனந்தக் காட்டி தருவது பரம் எனப்படும்.

2. திருப்பாற்கடலில் திருமகளும், மண்மகளும் திருவடி வருட யோக நித்திரை செய்து அறிதுயிலமர்ந்த நிலையே வியூகம் எனப்படும்.

3. விபவம் என்றால் இறங்குதல் என்று பொருள். தசாவதரங்கள் கொண்டு உலகை உய்விக்க வந்தமையே விபவம் எனப்படும்.

4. ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ளே இருந்து அதைத் தாங்கி நிற்கும் நிலையே அந்தர்யாமித்வம் ஆகும்.

5. சாதாரண மானிடர்களுக்கு அரிதான பரம் முதலானவற்றிலிருந்து வேறுபட்டு யாவரும் வழிபடும் வகையில் தங்கம், வெள்ளி, மரம், கல், சாளக்கிராமம் எனும் பொருட்களில் உருவமாய் எழுந்தருளி தரிசனம் தருவதே அர்ச்சாவதாரமாகும்.

இப்பூவுலகில் உள்ளோர்க்கு அர்ச்சாவதாரமே எம்பெருமானை அடையும் எளிய வழியாகும்.

செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று,     -    மணவாள மாமுனிகள்

இங்ஙனம் இவ்வுலகில் அதுவும் நமது பாரதத்தில் தானே உருவானதாகவோ (ஸ்வயம் வியக்த ஸ்தலங்கள் ), ரிஷிகளாலோ, மன்னர்களாலோ, அடியார்களாலோ பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வரக்கூடிய ஸ்தலங்களுக்கு ஆழ்வார்களின் பாசுரம் சூட்டப்பட்டதென்றால் அந்த தலத்தின் பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டவராக கருதப் படுகிறார். அந்தத் தலம் திவ்யதேசம் எனப்படுகிறது.

 சிவபெருமான் உறைந்த தலங்களில் தேவாரம் பாடப் பெற்றிருந்தால் அவை பாடல் பெற்ற தலங்கள் என்று அழைக்கப்படுவது போல ஆழ்வார்களின் பாசுரங்களால் அழகு கூட்டப்பெறும் திருமாலின் திருத்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

ஆயிரமாயிரம் வைணவத் திருத்தலங்களில் சிறப்பான திவ்யதேசங்களாகக் கருதப்படுபவை நூற்றெட்டு தலங்களாகும். இனி அவை பற்றி விரிவாகக் காண்போம்,