Sunday, November 8, 2015

யானைகள் புல் மேயவதில்லை.


சில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ? ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நீலமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து வைத்தது போல அந்த சிறிய ஏரி அவன் எதிரில் தெரிந்தது. அதன் கரையில் இருந்த பாறையின் மீது அவன் வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறான்.

அவன்..ரவி என்கிற ரவீந்திரன்.

முப்பதுகளில் இருந்தான். இள வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து சில போர்முனைகளையும் கண்டவன். பகைவர்களுக்கு பாரதத்தின் வீரம் என்னவென்று காட்டி அதன் பரிசாக ஒரு பாதத்தை இழந்தவன். கைபர் கணவாய் போல நெற்றியின் ஓரத்திலிருந்து கன்னத்தின் வழியாக காதுக்கு கீழ் வரை ஒரு பள்ளம்....முன்பல்லில் ஒன்றில் பாதி காணாமல் போனதால் பேசும்போது லேசாக காற்றுடன் சொற்கள் கலந்து வரும். ஆனாலும் அவன் கண்ணில் இன்னும் கதிரவன் ஒளி வீசியபடிதான் இருந்தான். நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையும் அவன் மன உறுதிக்கு கட்டியம் சொல்லும்.

பணி செய்ய முடியாத நிலையில் இன்று இராணுவத்தில் இருந்து வெளியேறி விட்டான். வயிற்றுக்கு உணவும் உடல் மறைக்க உடையும் அவனுக்கு என்றும் கிடைத்துவிடும். ஆனால் வாழ்வின் வசந்தங்களை அவன் இதுவரை கண்டதிலை. என்றோ அனாதையானவன் இன்றோ குரூபியானவன். அதனால் அவன் வாழ்வில் துணை வர எந்தப் பெண்ணும் தயாராகவும் இல்லை. உடன் பணியாற்றியதால் அவன் உள்ளத்தைப் புரிந்து கொண்ட நண்பன் சாமிதுரை அவனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.

"எவ்வளவு நாள் வேணுமானாலும் என்னோடு இரு. உனக்கு ஒரு வேலை கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. அப்புறம் யோசிக்கலாம்". துரையின் அன்பு அழுத்தமாக அவனைப் பிடித்துக் கொள்ள அவன் மனைவியின் பயம் கலந்த முகம் அவனை தர்மசங்கடத்தில் தள்ளியது.

"உங்க ஃப்ரெண்டைக் கொஞ்சம் அவர் ரூம் பக்கமே இருக்கும்படி ஏதாவது சொல்லி வையுங்க. குழந்தை பாத்தாலே பயப்படுது" அவள் கிசுகிசுத்தது ஒரு வேளை ரவிவின் காதில் கேட்டாலும் கேட்கட்டுமே என்று கூட இருந்திருக்கலாம். அம்மா அக்கா தங்கை என்று எந்த அன்பும் அவன் கண்டதில்லை. அதனால் இது போன்ற பேச்சுகள் அவன் காதில் படாமலே போய்விடும்.

ரவி சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுகெட்டிய தொலைவு வரை மரங்களும், புதர்களும் மட்டுமே தெரிந்தன. மேல் வானத்தில் சூரியனை சில கருமேகங்கள் சுற்றி வளைத்து ராகிங் செய்து கொண்டிருக்க, அனுசரணை இல்லாத மனிதர்களாக மலை முகடுகள் அசையாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன.

காற்றில் லேசாக குளிர் அதிகரிக்க அவன் உடம்பு சிலிர்த்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு சால்வையைப் போர்த்தியபடியே எழுந்து விந்தி விந்தி நடந்தான். ஊனமான காலில் அணிந்திருந்த வட்டமான செருப்பு லேசாக வழுக்க காலை அழுத்தி ஊன்றியபடியே நிமிர்ந்தபோது பொட்டென்று ஒரு நீர்த்துளி அவன் நெற்றியில் விழுந்தது. இலவசப் பொருட்கள் தருவதாகக் கூறும் அறிவிப்பைப் பார்த்ததும் கூடும் மக்கள் போல அதற்குள்ளாக கருமேகங்கள் கூடி வானத்தில் சண்டையிட ஆரம்பித்து இருந்தன. கையில் குடை இல்லை. வீட்டிலிருந்து நிறைய தூரம் வந்து விட்டான் என்பது தெரிந்தது. மழை வலுக்கும் முன் தங்க ஒரு இடம் தேவை.

எங்கும் மரக்கூட்டங்கள்தான்... ஊழித் தாண்டவமாடும் ருத்ரன் போல தலை விரித்து ஆட ஆரம்பித்த மரக்கூட்டங்களின் நடுவில் அந்த சிறிய வீடு தெரிந்தது. உள்ளே தெரிந்த விளக்கின் ஒளி இதமாக மனதில் ஒரு வெப்பத்தைக் கிளப்ப அவன் மெல்ல மெல்ல அந்த வீட்டை நோக்கி நடந்தான். பூமியை செழிப்பாக்க வருகிறோம் என்று மேகங்கள் விடும் செய்தியைத் தாங்கி வரும் தந்திக் கம்பிகளாக மழை ஆரம்பித்தபோது ரவி அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டினான்.

கதவு திறந்ததும் தெரிந்தது அந்த முகம். அன்பின் முலாம் பூசி இருந்தது...

"உள்ளே வாப்பா.. மழை வலுக்குது"

இது வரை அவனைக் கணடதும் முகம் சுளிக்காமல் வரவேற்றது இவள் மட்டும்தானோ ?

அவன் உள்ளே வந்தபோது "அங்க்கிள் அங்க்கிள்" என்றபடி ஒரு சின்னப்பயல் .. இல்லை.. சின்னப்புயல் அவன் மீது பாய "டேய் பாபு.. அங்க்கிளை தொந்தரவு செய்யாதே" என்றபடி பாபுவை நகர்த்தி விட்டு "நீ உட்காருப்பா" என்றாள். ஒரே ஒரு சிறிய அறை. அதை ஒட்டியபடி இருந்த இன்னொரு அறை சமையலறை எனவும், ஓரமாகத் தெரிந்த கதவு டாய்லெட் என்றும் புரிந்தது.

"பரவாயில்லைங்க சின்னப் பையன்தானே ! " அவனுக்குள் துரையின் மகனுடைய பயந்த முகம் தோன்றி மறைந்தது.

"என் பேரு ரவீந்திரன். நான் சில்வர் எஸ்டேட் குவாட்டர்ஸில் என் நண்பனோடு தங்கி இருக்கேன். இங்கே இந்த ஏரிக்கு வாக்கிங் வந்தேன்.திடீர்னு மழை வந்திருச்சு. அதான்.."

"இந்த ஏரிப்பக்கமெல்லாம் டூரிஸ்ட்கள் கூட யாரும் வர்ரதில்லை. அதனால் சரியான பாதையும் இல்லை." என்றவள் அவன் காலைக் கவனித்து "கண்ணி வெடியா?" என்றாள்.

"ஆமா..எப்படி சரியா...... ?"

அவள் கையை நீட்டிய திசையில் பார்த்தபோது மிலிடரி உடை அணிந்த ஒருவரின் படத்துக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

"என் வீட்டுக்காரர். எப்பவும் நாடு நாடுன்னே சொல்லுவார். மிலிடரிக்காரங்க எல்லாரும் யானை போலன்னு சொல்லுவார். எப்பவும் உயர்ந்த லட்சியத்தோடதான் வாழணும். யானை எப்பவுமே ஒசந்த மரக்கிளையை ஒடிச்சு திங்குமே தவிர தரையில் இருக்குற புல்லைத் தின்னாது. நாங்க அவர் சொன்னதை தட்டுனதே இல்லை. மிலிடரிக்காரங்கன்னா அவருக்கு உசிரு. நாட்டுக்கு உழைக்கிறவங்களுக்கு என்ன வேணுமானலும் செய்யலாம்னு சொல்லுவாரு"

பாபு அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். ரவிவின் மனதில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது. ஆண்ட்டியுடன் பேசிக்கொண்டே நேரம் நகர நகர வெளியே மழைத்தாரைகள் இருளுடன் கூடி திரை போட்டு உலகத்தை மூடியிருந்தன. பேச்சு வாக்கில் ரவி அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆண்ட்டியின் முகத்தில் ஒரு பனி மூட்டம்.

"எப்படிப்பா இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு இருக்கே ? எங்க வீட்டுக்காரர் சொன்னது போல நீங்க எல்லாருமே யானைங்கதான். எங்களைப் பாரு..எங்களுக்கும் வேறு சொந்தம் யாரும் இல்லை. ஆனா எனக்கு பாபுவும் அவனுக்கு நானுமாய் இருக்கிறோம்."

"இந்த இடத்தில் தனியா..."

அவள் சிரித்தாள்.

"இயற்கைக்கு எதிராகத்தான் போராட முடியாது. மனிதர்கள் கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திக் கொள்ள எனக்கு சக்தி இருக்குதுப்பா"

மழை விடுவதாகத் தெரியவில்லை.

"இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிட்டு காலையில் ம்ழை விட்டதும் கிளம்பலாமே"

பேய் மழையால் நகர முடியாமல் போக ரவி துரைக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னான். காலையில் மழை விட்டதும் வருவதாக் சொன்னான். அன்று இரவு ஆண்ட்டி கொடுத்த அவள் கணவரின் லுங்கியைக் கட்டிக்கொண்டு சூடான சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தபோது ஆண்ட்டி அவனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். பாபு கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் மடியில் சாய்ந்தபடி தூங்கிப் போயிருந்தான்.

"உன் கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான் போலிருக்கு"

"ஆமாம் ஆண்ட்டி"

"அவனுக்கு அன்பு காட்ட என்னை விட்டால் யாரு இருக்காங்க.. அதான் பள்ளம் கண்டதும் பாயுற தண்ணி போல பாயுறான்" ஆண்ட்டி ஜன்னல் இடுக்கு வழியாகத் தெரிந்த மின்னலைப் பார்த்தபடி சொன்னாள்.

"அவர் போன பிறகு இந்த வீடும் என் நகைகளும்தான் மிச்சம். நான் எஸ்டேட்டில் வேலை பார்த்து எங்களைக் காப்பாற்றி கொள்கிறேன்"

அவனும் மழையைப் பார்த்தபடியே சொன்னான்.

"ராணுவத்தில் வேலை பார்த்திருந்தாலும் பணம் சேர்க்கத் தோணலை. அதனால்தான் கிடைச்ச வேலைக்கு கூட டெபாசிட் கட்ட என் நண்பனைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன்"

அவள் பேசவில்லை.

காலையில் கண்விழித்தபோது அவள் சூடான டீயுடன் இருக்க பாபு கீழே விழுந்திருந்த மரக்கிளைகளில் இருந்த பூமொட்டுக்களைப் பறித்துக் கொண்டு இருந்தான்.

"வெளியே நிக்காதே பாபு... மரமெல்லாம் சாய்ஞ்சிருக்குது பாரு" அவள் பாபுவை அழைத்தாள்.

"என்னப்பா நல்ல தூக்கம் வந்துச்சா ? " என்று கேட்டபடி டீ கிண்ணத்தை எடுத்துக் கொண்டு போனாள்.

"போய்விட்டு அப்புறமாக வரேன் அக்கா. என் விலாசம் எழுதி வச்சிருக்கேன் அக்கா... நான் அப்படி கூப்பிடலாமில்லையா ?".

"தாராளமா.. என் வீட்டுக்காரர் போல நீயும் ஒரு யானைதானே ! அதனாலே இனிமேல் நீயும் எங்க சொந்தம்தான். போகும்போது இதை எடுத்துக்கிட்டு போப்பா" என்று ஒரு பொட்டலத்தைக் கொடுத்தாள். ஏதேனும் பலகாரமாக இருக்கும்.

இது வரை அவனிடம் யாரும் காட்டாத அன்பை அந்த ஏழைத் தாயிடம் அவன் கண்டான். மிலிடரிக்காரர்கள் மட்டுமல்ல. அவர்களை அறிந்தவர்களும் யானைகள்தானோ ? பாபு அவனைக் கட்டிக்கொண்டு போக விடாமல் அடம் பிடிக்க அந்த ஆண்ட்டி அவனைப் பிரித்து அழைத்துக் கொண்டு சென்றபோது அவனுக்குள் ஏதோ சோகம் தோன்றியது. யாரும் இல்லாத தனி மரம் தான் மட்டுமல்ல என்றும் தோன்றியது.

வானம் இன்னும் மூட்டமாகவே இருந்தது. அவன் துரையின் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஒரு பெருமழை பிடித்தது. காற்றோடு மழையும் சேர்ந்து வெறி பிடித்தது போல ஆடி முடித்தபோது அவன் பிரித்துப் பார்த்த பொட்டலத்தில் அவன் கட்ட வேண்டிய டிபாசிட் பணம் இருந்தது..அவன் பிரமித்திருந்தான். ஆனாலும் அதைத் திரும்பக் கொடுத்துவிடத் தீர்மானித்தான்.

அன்று மதியம் ......

ரவி ஏற்கனவே நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒரு பெரிய கம்பெனியின் அவனை உடனே சென்னைக் கிளையில் சேரும்படி செய்தி வந்தது. தங்கும் இடமும் அவர்க்ளே தருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. டிபாசிட் எதுவும் கட்ட வேண்டியதும் இல்லை.

"கங்கிராஜுலேஷன்ஸ் ரவி" என்று துரை அவனை அணைத்துக் கொண்டான். "இனிமேல் உனக்கு ஒரு குறையும் இல்லை"

"உன்னைப் போல ஒரு நண்பன் இருக்கும்போது எனக்கு என்ன குறை? ஒரு சின்ன விஷயம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் துரை" மனம் முழுவதும் பிரகாசமாக அவன் கிளம்பினான்.

அந்த மரக்கூட்டத்துக்கு அருகே வந்தபோது ஒரு வேறுபாடு தெரிந்தது. காற்றில் அங்கங்கே மரங்கள் விழுந்து கிடக்க மனிதக்கூட்டமும் இருந்தது. அந்த வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் தெரிந்தன. அவன் விந்தி ஓடினான்.

"என்ன ஆச்சு?"

"நேத்து ராத்திரி மழையிலேயே அந்த மரமெல்லாம் சாய ஆரம்பிச்சிருந்துச்சு. காலையிலே மறுபடி அடிச்ச காத்துல அந்த மரம் அந்த மிலிடரிக்காரன் வீட்டு மேலே விழுந்திருச்சு. வாசலில் இருந்த அவரு சம்சாரம் அடிபட்டு அப்போதே இறந்துட்டாங்க. அந்தப் பையன் மட்டும் உள்ளே இருந்திருக்கான். அதனால தப்பிச்சுட்டான். அவங்களுக்கு உறவுக்காரங்க வேற யாரும் இல்லை., பாவம் அந்த புள்ளை நிலைமை"

ரவி வேகமாக முன்னேறினான். சிதறிக் கிடந்த கிளைகளுக்கும், இலைகளுக்கும் நடுவில் ஒரு சின்ன உருவம் தெரிந்தது. அதை நோக்கி முன்னேறியவனை ஒரு போலீஸ் உருவம் தடுத்தது.

"அங்கிள்" ஒரு விம்மலுடன் பாபு அவனிடம் ஓடி வர அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.

"அழக்கூடாது பாபு... அங்க்கிள் இருக்கேனில்ல"

அவன் தன்னுடன் ஒட்டிக் கொண்ட பாபுவைத் தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னே போனான்.

"நீங்க சொந்தக்காரவுங்களா ? அப்போ இப்படி வாங்க". ஒரு போலீஸ் முகம் அழைத்தது.

பிறகு..

"சார்.. இப்போதைக்கு இந்தப் பையனுக்கு உங்களைத் தவிர தெரிஞ்ச மாதிரி சொந்தம் யாருமில்லே. நீங்க சம்மதிச்சா உங்க கூட கூட்டிகிட்டு போகலாம். மத்த விஷயங்களை அப்புறமா பார்த்துக்கலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி இவனை ஏதாச்சும் அனாதை இல்லத்தில் சேர்த்துடுறோம்."

"வேணம் சார். நான் என் கூட அழைச்சுகிட்டு போறேன். தேவைப்படும்போது கூப்பிடுங்க வரேன்"

அவன் மனதில் பாபுவின் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. யானைகள் என்றுமே உயர்ந்த மரக்கிளைகளைக் கொண்டே தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ளும். நம் சிந்தனையும் என்றும் உயர்வாகவே இருக்கட்டும். ஒரு ராணுவ வீரன் எதற்கும் கலங்காமல் முன்னேற வேண்டும். ரவிவின் முகமும் மனமும் இப்பொது தெளிவாக இருந்தன. அவனுக்கு என்று இப்போது ஒரு பிடிப்பு இருந்தது.

எல்லாம் முடிந்து அவன் பாபுவின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பியபோது அவன் நடையில் தடுமாற்றம் இல்லை. ஏனென்றால்...

யானைகள் புல் மேயவதில்லை.

No comments: